Thursday, 25 January 2018

அறம் செழிக்க வாழ்வோம் (கலித்தாழிசை )


அறவழி நின்று அன்பு மொழிபேசி
பிறஉயிர் தன்னைப் பிரித்துப் பார்க்கா
உன்னத நிலையும் உன்னுள் கொண்டு
இன்முகம் காட்டி இனிமை பகன்றிடு !

அயற்சி இன்றியே அயராது தொண்டாற்றி
முயற்சி செய்தே முற்போக்காய் வாழ்ந்து
பிறமொழி பேசும் பிறநாட்டுச் சோதரனை
பிறழ்தல் இன்றி பிடிப்பாய் இருந்திடு
!
நீதி காத்து நீசம் இன்றி
அதிசயம் செய்து அகிலம் காத்து
சூழ்ச்சிமிக்க வாழ்வில் சூதினை விலக்கி
காழ்புணர்ச்சி அகற்றி காத்திடு உலகை !

கங்கை போற்றும் கலியுக மனிதா
நங்கையரின் பெருமையை நாடுபோற்றச் செய்து
பிறனில் விழையாப் பேராண்மை கொண்டு
உறவைப் பேணி உண்மைநெறி நின்றிடு !

ஐம்பொறி அடக்கி அண்டம் வென்று
வம்பில்லாச் சமுதாயத்தை வையகத்தில் உருவாக்கி
அன்பைப் போதித்து அரவணைப்பாய் இருந்து
இன்னல்கள் போக்கியே இன்பமாய் வாழ்ந்திடு!

காற்றடைத்த உடலில் காற்றிருக்கும் வரை
பற்றற்ற நிலையைப் பற்றியே வாழ்ந்து
மண்ணாக உதிர்ந்து மாயும் முன்னே
ஒன்றாக வாழ்ந்தே ஓங்கிய நிலை எய்திடு!.

     காரைக்குடி கிருஷ்ணா

Saturday, 20 January 2018

அச்சம் தவிர்:
****************
வீரத்தமிழ் படைத்த வீரா!
கல்லணை கட்டிய கரிகாலா!

சீதையை மீட்ட
இராமனைப் போல்
காவிரியை மீட்டெடு!

இரத்தம் குடிக்கும்
மீத்தேன் திட்டத்தை
விரட்டியே தமிழ்
மண்ணைக் காத்திடு!

வீர விளையாட்டு
நமது அடையாளம்
அடையாள மதனைத்
தடை செய்பவர்களை
சட்டங்கள் செய்தே
தடை நீக்கிடு!

மொழிமீது படையெடுப்பவனை
தமிழ்ப் புலமையால்
வாகை சூடிடு!

அச்சம் கொள்ளாதே
ஒச்சம் அடைவாய்!

அடங்கி ஒடுங்கி
இருக்க நீயொன்றும்
அஞ்சும் ஆமையல்ல
புன்மைத் தேரையுமல்ல!

குன்றெனவே நிமிர்ந்து நில்
நேர்படவே பேசு
உன் விழிதனில்
உலகிற்கு ஒளிகொடு!

உடைமை மக்களுக்குப்
பொதுவே என்பதுணர்த்து!
இருப்பவன் இல்லாதவன்
என்பதில்லாமற் செய்!

தொகை தொகையாய்க்
கொள்ளையடித்த செல்வமெல்லாம்
அடுக்கடுக்காய் சிலபேரிடம்
நச்சுக் கனியாய்!

இளம் வீரா!
தீரத் தமிழா!
உன் தீரத்தால்
உடைமை யெல்லாம்
மக்களுக்குப் பொதுவாக்கிடு!

செயலைச் செய்துவிடு!
விளையும் பார்!
மாற்றம் உனதுடலில்!

புதுஇரத்தம் பாய
புரட்சிகள் செய்வாய்!
மானுடம் தழைக்க!
புதுஅகிலம் படைப்பாய்.!

    காரைக்குடி கிருஷ்ணா

28 -01 -2018:
கவியரங்கக் கவிதை:
*************************
சொல்லத்தான் நினைக்கிறேன்:
*******************
தலைப்பு : புன்னகை செய்:
***********;*****************
பூமித்தாயே புன்னகைசெய் 
ஒருமுறை
மன்னிப்பாயோ? பல தலைமுறை
மாதம் மும்மாறி மழை -அது
மறந்துபோன பழைய புராணக்கதை
பளிங்குத் தண்ணீரைச் சுமந்து கிடந்த
கண்மாய் குளங்கள் -அவை
பதுங்கியது எங்கே?
எங்கெங்கும் இருந்த
காலப்பருவச் சூழ்நிலை என்னாச்சு?
எருதுமிதித்தா தொழிபோல
மாறிப் பல நாளாச்சு
இவள் மடுவில் சுரக்கும் பாலான தேனருவி போதாதோ?
பொத்தும் குடிக்கின்றாயே இரத்தம் சுண்ட
வானுச்சி நோக்கின் பேரழகு குறைந்ததோ?
ஒப்பனை சேர்க்கின்றாயே?
தொழில் புரட்சியின் கரும்புகையால்
வளங்களில் இவள் காமதேனு கற்பக விருட்சம்
அடியோடு சுரண்டி அள்ளிவிட்டாய்
இவள் காரை எலும்பு தெரிய
நெகிழி இவளை நைத்தது அதிகமே
இவள் அங்கங்களெங்கும் புரையோட
விண்ணுலக ஞானத்தைச் சுழற்றிவிட்டாய்
வானில் இவள் தோலைக் கிழித்து விட்டாய்
விஞ்ஞான மனிதா
உன் வேகத்தைத் தணித்துக்கொள்
பூமியில் வாழும்நிலை மட்டுமல்ல
ஜனனமும் குறைந்து விடும்
நிறைமனதில்லா பகுத்தறிவாளனே
பகட்டாய் இராதே
பூமித்தாயும் ஓர் உயிர் ஜீவன்தானே
சாக்காடு வாராதோ? -உன்
விண்ணுலகச் சிந்தைக்கு
நோக்காடு வந்துள்ளதே
மண்ணுலக விந்தைக்கு
பெற்றெடுத்தவள் முதல் தாய்
வளர்த்தெடுத்தவள் இவள் இரண்டாம் தாய்
இவள் மற்றொரு கர்ப்பப் பை
கருவறுத்து விடாதே
கர்ப்பம் கலங்க
மற்ற மலட்டுக் கிரகங்களின் தேடல் வேண்டாம்
உற்றவளின் தேடல் வேண்டும்
தேடலோடு உள்ளார்ந்த புரிதலும் வேண்டும்
பூமித்தாயே புன்னகை செய் ஒருமுறை.

     காரைக்குடி கிருஷ்ணா...

Thursday, 18 January 2018

நன்றி சொல்வோம்

நன்றி சொல்வோம்
******-*****************
நிலைமண்டில ஆசிரியப்பா
**-----**************
உலகோர் போற்றும் உன்னதச் சுடரே
பலபொருள் தந்து பல்லுயிர் காக்கும்
உயிரின் முதலே உயர்ந்த பொருளே
பயிர்கள் வளர்த்து பயன்கள் நல்கி
எல்லாம் நல்கிய எல்லோன் போற்றியே.

     காரைக்குடி கிருஷ்ணா

Tuesday, 16 January 2018

அறம் வளர்ப்போம்

அறம் வளர்ப்போம்;
***********************
தீச்சொல் அகற்றி
இனியமொழி பகன்று/
பிறன்பொருள் பற்றாது
தன்பொருள் கரவாது/
இல்லார்க்கு ஈந்து
மெய்வழி நின்று/
பொறைகாத்து எவ்வுயிர்க்கும்
இன்னாசெய்யாதிருத்தலே அறமாகும்./

     காரைக்குடி கிருஷ்ணா

Thursday, 11 January 2018

முகம் தொலைத்த முகிலினங்கள்


காத்திருக்கான் காத்திருக்கான்
விவசாயி காத்திருக்கான்
நல்லமழை பெய்யாதா?
விவசாயம் செழிக்காதா?
ஏக்கத்தில் விவசாயி
மடியில் விதையுடன்
ஏரிகுளம் காய்ஞ்சிருச்சு
வயல்வரப்பு வெடிப்பாச்சு
பூமியில் சூடும்
ஏறிப் போச்சு
பச்ச மரம்
வாடிப் போச்சு
மாடு மேய
புல் இல்லை
காடழிஞ்சு நாடு
பெருசாச்சு
காட்டு விலங்கும்
நாட்டுக்கு வந்தாச்சு
தண்ணீரும் இங்கே
காசாச்சு
தரணியில் எல்லாம்
மாறிப் போச்சு
நீ மட்டும் என்ன
விதி விலக்கா?
அடையாளம் தொலைந்து
அலைகின்றாய்
காலம் மாறி
வருகின்றாய்
காவல் தெய்வம்
நீ அல்லவா?
உனது இருப்பை
நிலை நாட்டி விடு.

        காரைக்குடி கிருஷ்ணா

ஹைக்கூ

வாழும் நாள்
கூடிக்கொண்டே போகிறது
"அனுபவம்".

      காரைக்குடி கிருஷ்ணார்ப்பணம்

Wednesday, 10 January 2018

தமிழ்த்தாய் வாழ்த்து


நீலவண்ணக் கடலை
ஆடையாய்த் தரித்த ஆரணங்கே!
குளிர்நிலவை பிறைநெற்றியில்
திலகமாய்ச் சூடியவளே!
மேருமலையே உனது
கருங்கூந்தலானதே!
குளிர்ந்த காஷ்மீர்
உனதிரு கண்களானதே!
வற்றாத ஆறுகளே
நீயணிந்த வெள்ளிய
அணிகலன்களே!
முக்கடல் சங்கமம்
கன்னியிலே!
உனது ஒற்றைப் பாதமே
தமிழகமானதே!
வங்கப் புலியே உன்
வாகனமானதே!
முத்தமிழ் தந்து
திருவாய் மலர்ந்தவளே!
முன்தோன்றிய மூத்தவளே!
கன்னல் சுவையே!
கனியமுதே !
என்றும் மழலையாய்த்
தவழும் உன் திறம்
கண்டு சிந்தை
வியக்கின்றதே!
உன்னில்தான் ஆழ்கடலாய்
எத்தனை பொருண்மைகள்!
அருந்தமிழே! ஆரணங்கே!
சிந்தையில் ஊறும் தேனே!
எங்கள் ஏற்றமும் உன்னாலே!
தேமொழியால் சிந்தை
நிறைப்பவளே!
எத்திக்கும் உன் மணமே!                                                                                      செழுந்தமிழே!
எண்ணமெலாம் ஆள்பவளே!
எங்கள் பேச்சிலும்
மூச்சிலும் நீயே!
அன்னைத் தமிழே!
வணங்குகின்றோம் உனையே!

       காரைக்குடி கிருஷ்ணா

  அரிக்கேன் விளக்கு '
***************************
அறியாமைபோக்கி அறிவுச்சுடர்
ஏற்றியவள் நீ
உனைப்பார்க்கும் போது
தாத்தா பாட்டியை
நினைவு கூர்ந்தாய்
இன்றும் ஏழைக்குடிசையில்
அணையாவிளக்காய் எரியும்
பழைமையின் ஜோதி.

       காரைக்குடி கிருஷ்ணா

Monday, 8 January 2018

முகவரி

முகவரி:
*********
பரந்த உலகம்
கண் முன்னே

அகக்கண் கொண்டு
அத்தனையும் பார்

பிறந்தமக்கள் அனைவரும்
ஒன்றே என்றுணர்

பிறஉயிர் படும்
துன்பம் தனை
உனதாக்கிப் பார்

ஒளிதரும் ஆதவனும்
குளிர்தரும் நிலவும்
பேதம் பார்ப்பதில்லை

ஆழ்கடலும் பொதுவே
நீள்விசும்பும் பொதுவே

சுவாசிக்கும் காற்றும் ஒன்றே
பசியும் ஒன்றே
தூக்கமும் ஒன்றே

கொலைமலிந்த இவ்வுலகில்
குற்றம் நீக்கப் போராடு
விலைமதிப்பில்லா உயிர்கள்
அதனை உதிரம்
கொடுத்தும் காத்திடு

அற வழியில் 
அகிலம் ஆளப்பழகு

உண்பவை நாழியே
உடுப்பவை இரண்டே

உழைப்பால் உயர்ந்திடு
பெற்ற திருவை
சுற்றம் தழைக்க
கொடுத்திடு

உடலுக்கும் உயிருக்கும் 
அழிவுண்டு
ஆன்மாவைப் போல்
உனது பிறப்பை
நிலை நாட்டிடு

அனைத்தும் பொதுவாக்கி
பிரிவினை அகற்றிடு

அன்பால் உலகம்தனை
ஒன்றேயெனக் கண்டிடு

இப்புவியைப் போல்
உலகிற்கு வித்தாகி
நின்றிடு

வாழும் காலம்
கொஞ்சமே ஞாலம்
தழுவியே வாழ்ந்திடு

மண்ணில் மறைந்தாலும்
மன்னுதல் திடமே
இவ்வுலகம் உனையே
அடியொற்றி நடந்திடுமே

காரைக்குடி கிருஷ்ணா


Saturday, 6 January 2018


*******************
நெளிந்த நாணல்
புல் போல்
பச்சைப் பட்டுப்புடவையில்
வானுயர்ந்த மாளிகையில்
முகிலினங்கள் மோத
குளிர்ந்த காலையில்
ஆதவனின் கற்றை மின்ன
மாடப்புறாக்கள் பறக்க
நெடிய மரங்கள்
தென்றலாய் வீச
அணிந்த ஆபரணங்கள்
ஒளி வீச
நிலவே முத்துக்களாய்
சதங்கைக்குள்
சலக் சலக்கென்ற
சத்தம் முத்தமிட
மின்னலிடை நோக
பங்கயத்தன்ன பாதம்
வருந்திட
வைர மணிகளாய்
கண்கள் மிளிர
நவ்வி யன்ன
இளங் கொடியாள்
நல்லோர் போற்றும்
நறுந் தமிழாள்
வான்மதி தோற்கும்
ஒளிபொருந்திய முகத்தினள்
கம்பன் பாட
மறந்த காப்பியத்தாள்
பாரதி போற்றிடும்
தே மொழியாள்
கையிரண்டில் மலர்ச்சரம் ஏந்தி
வண்ணமான அன்னம்
நடை போட்டு
என்னருகில் என்னருகில்
என் மதுரையை ஆள
வந்து விட்டாள் மீனாட்சி.

    காரைக்குடி கிருஷ்ணா